நாடு பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இணங்குமாறு கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதை முன்னிறுத்தி தேசிய சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பிவைத்த கடிதம் தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாகவும், அத்தகைய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதிக்கான தனது பதில் கடிதத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து அரசியல், சமூக, கலாசார, பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவந்திருப்பதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர், அனைத்துத் தேசிய பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார் |