‘ஒன்றிணைவோம் ஒருமித்த குரலில் உரக்கச் சொல்வோம்’ எனும் தொனிப் பொருளில் நேற்று தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிலையில் மன்னாரில் 2 ஆம் நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமானது. வடக்கு- கிழக்கில் உள்ள சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள்,கல்விமான்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 2ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் பளை நகர்ப் பகுதியில் இடம்பெற்றது. இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். யாழ்ப்பாணம்- நாவற்குழியில் இரண்டாவது நாளாக இன்றும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா, தரணிக்குளத்தில் 2ஆம் நாளான இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டமானது வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்துக்கு முன்பாக இன்று காலை 11 மணியிலிருந்து இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக மல்லாவியிலும் பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் போராட்டம் இடம்பெற்றது. ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியல் திரளவேண்டும் என கோரி, அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு திரௌபதை ஆலய முன்றலில் இன்று பொதுமக்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். |