 குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும், பொலிஸார் மற்றும் சிங்கள பிக்குகள் இணைந்து அதனைத் தடுத்திருப்பதன் மூலம் தமிழ்மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது' என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன்,தெரிவித்துள்ளார் |
அத்தோடு, அப்பகுதிக்கு வருகை தந்திருந்த பௌத்த பிக்குகள் மற்றும் சிங்களவர்களைக் காட்டிலும் அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸாரே மிகமோசமாக நடந்துகொண்டதாகவும், தம்மை மிலேச்சத்தனமான முறையில் தாக்க முற்பட்டதாகவும், அங்கிருந்த பெண்களைத் தகாதமுறையில் வெளியேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழ்மக்கள் குருந்தூர் மலையில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பல ஆண்டுகளாக வழிபாட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்குத் தொடர்ந்தும் இடமளிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்திய கஜேந்திரன், ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியை விட்டுக்கொடுப்பதற்குத் தாம் ஒருபோதும் தயாரில்லை என்றும் தெரிவித்தார். |