இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொதுச்சபை உறுப்பினர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் அறிவித்துள்ளார். குறிப்பாக, பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டதை அடுத்து கட்சியின் திருகோணமலை மாவட்ட பொதுச்சபையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அதனை கடுமையாக விமர்சித்தார்கள். விசேடமாக மத்திய குழுவில் தீர்மானத்தினை எடுத்ததன் பின்னர் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதாக இருந்தால் பொதுச்சபையில் உறுப்பினர்களாக இருக்க வேண்டியதன் அவசியம் என்னவென்று கேள்விகளைத் தொடுத்தனர். இந்த நிலைமையில், வாய்த்தர்க்கம் கடுமையானதில் திருகோணமலை மாவட்டத்தின் ஒரு குழுவினர் தர்க்கம் செய்த குழுவினர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் கைகலப்பு உருவாகியிருந்தது. பின்னர் நிலைமைகளை ஏனைய உறுப்பினர்கள் கட்டுப்படுத்தியிருந்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரின் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று புதிய தலைவர் சிறீதரன் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |