லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது நீதி அமைச்சரின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வருகின்ற நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு 'அரகலய' போராட்டத்தின் போது சேதமடைந்த மகாவலி அதிகாரசபை சொத்துக்கான இழப்பீட்டுச் செயல்பாட்டின் போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவுடன் சதி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சஷீந்திரவுடன் தொடர்பு..
சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிரான லஞ்ச ஊழல் விசாரணையில் இரண்டாவது சந்தேக நபராக இந்த அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகமாக அவர் பணியாற்றிய காலத்தில், அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தி, ரூபா 885,000 இழப்பீட்டுத் தொகையை அங்கீகரிக்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் இன்று கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது