இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இராணுவச் செயற்பாடுகளுக்கு அப்பால் இரகசியமாக ஆயுதக்குழுவை நடத்தி வருவதாகச் சந்தேகிக்கின்றேன் என பிரதான எதிர்கட்சியான ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
வலி.வடக்கு மக்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் சிங்கள மக்கள் உள்ளிட்ட முழு இலங்கையருக்கும் அபகீர்த்தியை
ஏற்படுத்தும் விடயம் என்பதால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் பொது எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் உரையாற்றுகையில்,
வடக்கில் எவரும் பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்கும் எண்ணத்துடன் செயற்படவில்லை. பிரதேசத்தின் பாதுகாப்பை மக்களின் ஒத்துழைப்பின் ஊடாகவே பெற்றுக்கொள்ளமுடியும். இதற்காக மக்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.
நேற்று முன்தினம் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டது. நான் உரையாற்றியபொழுது ஊடகங்களைத் திட்டுவது போல் கூச்சல் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை.சேனாதிராஜா அந்த இடத்திற்குச் சென்று இடையூறு செய்தவரைத் தடுத்ததை நான் பார்த்தேன்.
ராஜபக்ஷ ஒழிக என மக்கள் கோஷமிட்டபோது சிலர் மக்களை விரட்ட முயற்சித்தனர். நான் அந்த நிகழ்விற்குச் சென்றபோது நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அண்மையில் இராணுவத்தினருடைய 8865 லாண்டோவர் ரக வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.
அதற்கருகில் சீருடை தரித்த இராணுவ அதிகாரி நின்றதையும் நான் கண்டேன். அந்த அதிகாரியைப் பார்த்து நான் சிரித்தபோது அவரும் என்னைப்பார்த்து சிரித்தார்.
அங்கிருந்த இராணுவப் பிரிவினர் கஜபாகு படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என எனக்குத் தகவல் கிடைத்தது. கஜபாகு படைப்பிரிரின் 14 ஆவது படைப்பிரிவினரிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியால் தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். உண்ணாவிரதத்திற்கு இடையூறு செய்தவர்களின் விபரங்களையும் தகவல்களையும் எம்மால் பெறமுடியும்.
உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்களையும் பத்திரிகையாளர்களையும் தாக்கியது தொடர்டபாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம். இவ் விடயத்தை ஐக்கியதேசியக் கட்சியின் இணையத்தளம் உட்பட சகல ஊடகங்களிலும் பிரசுரிக்குமாறு கூறியுள்ளேன். அப்பொழுதுதான் உண்மை வெளிவரும். தாக்குதல் நடத்தியோரை பொலிஸார் தாமாகவே முன்வந்து கைதுசெய்திருக்கவேண்டும்.
ஆனால் மக்கள் கைதுசெய்து ஒப்படைத்தவர் மீது கூட பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இச் சம்பவங்கள் கடந்தகால கிறீஸ் மனிதனை ஞாபகப்படுத்துகின்றன. யாழ்.மாவட்டத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுக்கு இவ் விடயங்கள் தெரிந்திருக்கும் என நான் நம்புகின்றேன்.
உண்மையில் இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இராணுவச் செயற்பாடுகளுக்கு அப்பால் இரகசியமாக ஆயுதக்குழுவை நடத்தி வருவதாகச் சந்தேகிக்கின்றேன். இது தவறாயின் அவர் எழுத்துமூலம் அறிவிக்கவேண்டும். இந்தச் செயல் இராணுவத்திற்கும் சிங்கள மக்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி தமிழ் மக்களுடைய கட்டமைப்புடன் மோதவைக்கும் செயல் என்பதால் உடனடியைாக தடுக்கப்படவேண்டியதொன்றாகும்.
பிச்சைக்காரனின் காயம் போல் இத்தகைய செயல்களைச் செய்து இந்த அரசாங்கம் பிச்சைக்காரன்போல் அரசியல் செய்கிறது. இவ்வாறு செயற்படாமல் அரசியல் செய்ய எங்களுத் தெரியும். நாம் இது தொடர்பாக இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியவிடம் இச் சம்பவத்திற்கும் இராணுவத்திற்கும் தொடர்பில்லையா என வினாவ விரும்புகின்றேன்.
இராணுவப் புலனாய்வாளர்களும் இதுதொடர்பில் விசாணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நான் கோருகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எனக்குத் தகவல் தரவில்லை. நான் இத்தவல்களைக் கொழும்பில் இருந்தே பெற்றுக்கொண்டேன் இவ்விடயம் தொடர்பாக நான் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து சர்வதேச ஜனநாயகத்திடமும் எழுத்துமூலம் முறையிடவுள்ளேன் என்றார்.
பிச்சைக்காரனின் காயம் போல் இத்தகைய செயல்களைச் செய்து இந்த அரசாங்கம் பிச்சைக்காரன்போல் அரசியல் செய்கிறது. இவ்வாறு செயற்படாமல் அரசியல் செய்ய எங்களுத் தெரியும். நாம் இது தொடர்பாக இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியவிடம் இச் சம்பவத்திற்கும் இராணுவத்திற்கும் தொடர்பில்லையா என வினாவ விரும்புகின்றேன்.