அண்ணாமலை தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவான்மியூரை அடுத்த சாஸ்திரிநகர் 14-வது குறுக்கு தெருவில் உள்ள பாடகர் மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டனர்.
வவுனியாவில் புதிதாக கட்டப்பட்ட கோவில் ஒன்றின் கும்பாபிஷேக விழாவில் கச்சேரி நடத்துவதற்காக சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மற்றும் 25 பேர் குழு இலங்கைக்கு வர இருந்தனர்.
அப்போது பாடகர்கள் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் நடந்தபோது வீட்டில் மாணிக்கவிநாயகம் இருந்தார். உடனடியாக அவர் வெளியில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அவர் கூறும்போது, ´எனக்கும் தமிழ் உணர்வு உள்ளது. எனது தலைமையில் இசைக்குழு செல்வதாக தவறாக கூறி உள்ளனர். இசைக்குழுவில் நானும் ஒருவன். இசைக்குழு இலங்கை செல்வதா? வேண்டாமா என்று அவர்கள் முடிவு எடுப்பார்கள்´ என்றார்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாணிக்க விநாயகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சாஸ்திரிநகர் பொலிசார் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்பட 30 பேரையும் கைது செய்தனர்.