காணாமல் போனவர்களின் அடையாளமே நான்: எழிலனின் மனைவி அனந்தி தெரிவிப்பு
ஆனால் இலங்கை அரசோ காணாமல் போனோர்களது நிலைபற்றி வாய் திறக்க மறுக்கின்ற அதே வேளை, அதற்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி வாய்மூட வைக்க முற்படுவதாக அனந்தி சசிதரன்(எழிலன்) குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தினில் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இக்குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
அதற்கும் அசராவிடின் எம்மை போன்ற செயற்பாட்டாளர்கள் மீது சேறு பூசுவதில் அரச இயந்திரம் முனைப்பு காட்டுவதாக தெரிவித்த அவர், அற்ப சொற்ப சலுகைகளிற்காக சோரம் போகின்றவர்களாக தமிழ் மக்களை அடையாளப்படுத்த அரச இயந்திரம் முற்படுவதாகவும் தெரிவித்தார்.
எனினும் அரசின் இத்தகைய போலி பிரசாரங்களை மக்கள் நம்புவதில்லையெனவும், எமது போராட்டங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளை கொச்சைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள் மக்களாலேயே முறியடிக்கப்பட்டு வருகின்றமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே ஆளும் தரப்பு தனது முப்படைகளையும் எடுபிடிகளையும் இத்தகைய பிரசாரங்களினில் ஈடுபடுத்துவதாக தெரிவித்தார்.
எனினும் காணாமல் போயுள்ளவர்களது குடும்பங்கள் சிந்தும் கண்ணீர் உலகை உலுக்கி நிச்சயம் நீதியை பெற்றுத்தருமென தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.