வடக்கு கிழக்கில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் ஆயுதக் குழுவினரையும் மத்திய அரசு வெளியேற்றவேண்டும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
வடக்கு, கிழக்கில் அதிகளவில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் மக்களை அச்சுறுத்தி வரும் ஆயுதக் குழுவினரையும் வெளியேற்றி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அச்சமில்லாத ஒரு வாழ்வை
மத்திய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் காணாமற்போனவர்கள் தொடர்பிலும் அக்கறையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஆதரவற்ற சிறுவர்களைக் காப்பாற்றும் அமைப்பினால் அமைக்கப்பட்ட சிறுவர் கிராமம் நேற்று மாலை யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் சிறுவர், பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
மத்திய, மாகாண அரசாங்கங்களிடையில் புரிந்துணர்வும் கூட்டுறவும் நிலவினால்தான் நாடு முன்னேறும். மக்கள் நலம் பெறுவார்கள். மத்திய அரசாங்கத்திற்கு சில அதிகாரங்களையும் கடமைகளையும் சட்டம் விதித்திருப்பது போல மாகாண அரசுகளுக்கும் சில அதிகாரங்கள், வரம்புகள், கடப்பாடுகள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை போதாது என்பதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகளும் அதிகாரத்தில் இருப்பவர்களின் அசட்டைகளும் காரணமென்று கூறலாம். மாகாண அதிகாரங்களை விரிவுபடுத்த மத்திய அரசாங்கம் முன்வரவேண்டும். முக்கியமாக இந்நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் முற்றிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இரண்டாவதாக புதியதொரு அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டு ஒற்றையாட்சி முறை கைவிடப்பட வேண்டும்.
ஒரே தேசம் ஒரே மக்கள் என்றெல்லாம் மேடைக்கு மேடை கூக்குரல் எழுப்புவதில் பயனில்லை. ஏனென்றால் இது ஒரே தேசமாக இருக்கும் அதேநேரத்தில் வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் மனதில்கொள்ள வேண்டும். ஒரேநாட்டில் வாழ்வதால் நாங்கள் ஒரே மக்களாகிவிட முடியாது. நாம் யாவரும் ஒருநாட்டு மக்களே என்று பெருவாரியான பெரும்பான்மையின மக்கள் கூறும்போது ”இது சிங்கள பௌத்த நாடு. எல்லோரும் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டின் கீழடங்கிய இந்நாட்டின் குடிமக்களே” என்ற அடிப்படை எண்ணத்தில்தான் தமது கருத்தை வெளியிடுகின்றார்கள். இது தவறு என்று அவர்கள் எண்ணுவதில்லை. இதன்மூலம் எமது குழந்தைகளுக்கும் தவறான சரித்திரக் கருத்துக்களைக் கொடுத்து வருகின்றோம் என்றும் நாம் சிந்திப்பதில்லை. இன்று சரித்திரம் மாற்றியமைக்கப்பட்டு தவறான சிந்தனைகள் அரசியல் காரணங்களுக்காகப் பரப்பப்பட்டு வருகின்றன.
இலங்கைத் தீவின் மற்றைய சிறுபான்மையினர் போலல்லாது தமிழர்கள் சிங்கள மக்கள் போல் நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களே. ஆகவே அவர்களைச் சிறுபான்மையினராகக் கருதவோ சிறுபான்மையினருக்குரிய சலுகைகளை அவர்களுக்கு வழங்கவோ தேவையில்லை என்றார்கள். அதாவது தமிழ் மக்கள் இந்நாட்டின் சிறுபான்மையினர் எனக் கருதப்பட்டாமல் காலதிகாலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்திருந்தார்கள் என்ற உண்மையை அவர்கள் நூறு வருடங்களுக்கு முன்னரே கூறியிருந்தார்கள். இப்பொழுது வடக்கில் வளரும் ஒவ்வொரு அரச மரத்தையும் சங்கமித்தை அல்லது மகிந்தன் கால அரசமரமென்றும் இராவணன் சிங்கள இனத்தவர் என்றும் புதிய சரித்திரம் வகுக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துவுக்குப் பின்னர்தான் சிங்கள மொழி நடைமுறைக்கு வந்தது. இராவணன் சரித்திர காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவர். உண்மைக்குப் புறம்பான இந்தப் புதிய சரித்திரம் சிறுவர் சிறுமியர் மத்தியில் விதைக்கப்பட்டால் இனக் கிளர்ச்சிக்கே அது வித்திடும்.
போரானது பல குடும்ப அங்கத்தவர்களைச் சிதறுண்டு செல்ல வழிகோலியது. தாய் ஓரிடம் தந்தை இன்னோரிடம் குழந்தைகள் வெவ்வேறு இடங்களில் வளர வேண்டிய சூழ்நிலை. மீண்டும் அவர்களைச் சேர்த்து வைத்து சிதறுண்ட குடும்ப வாழ்க்கைக்குப் புத்துயிர் அளிக்கும் இத்திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒரு திட்டம். ஆனால் பல குடும்பங்களில் புதியதொரு அங்கத்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்தான் காணாமல்போன நபர். அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்று கூறமுடியாத ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில்தான் அவரின் குடும்பத்தவர்கள் வாழ்கின்றார்கள். அவர்களை உயிருடன் கூட்டிச் சென்றதைக் கண்கூடாகப் பார்த்த அவரின் உற்றார் உறவினர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று அறியாது தவிக்கின்றார்கள்.
எங்கே தமது காணாதவர்களைக் காண எத்தனித்து அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் அவர்களை வாட்டி வதைக்கின்றது. காணாமல்போனவர் குறிப்பிட்ட இடத்தில் இருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டால்தான் கூட அதைத் தமக்குத் தெரியும் என்று வெளிப்படையாகக் கூறினால் எங்கே அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தமது எண்ணங்களை வெளியிடத் தயங்கி வாழ்ந்து வருகின்றார்கள்.