இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரங்களை தகர்க்க பாகிஸ்தானுடன், இலங்கை அதிகாரிகள் கூட்டுச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகிர் உசேனிடம் மத்திய பாதுகாப்பு அமைப்பினர் மேற்கொண்டுவரும் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தாக்க பாகிஸ்தான் உளவு அமைப்புடன் இலங்கை அதிகாரிகளும் இணைந்து திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதற்காக அந்த தூதரகங்களை உளவு பார்க்க இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் ஜாகிர் உசேனை நியமித்துள்ளது.
தாக்கப்பட வேண்டிய தூதரகங்களின் புகைப்படங்கள், அவற்றிக்கு செல்லும் பாதைகள் மற்றும் அவற்றின் பல்வேறு வாசல்கள் குறித்த தகவல்கள் ஜாகிர் உசேன் மூலம் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புகைப்படங்கள் பாகிஸ்தான் தூதரகத்தின் கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது