அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட் டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து வருகிறார். நேற்று நடந்த 12–வது நாள் விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வக்கீல் நாகேஸ்வரராவ் வாதிடுகையில் ‘‘ஜெயலலிதாவின் சொத்து கணக்கு விவரங்கள் மிகைப்படுத்தப்பட்டு உள்ளது. அவரது பழைய வருமானங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. கம்பெனிகளின் வருவாயையும் சட்ட விரோத சொத்தாக சேர்த்து கணக்கிட்டது தவறு’’ என்றார்.
நீதிபதி குமாரசாமி குறுக்கிட்டு ‘‘உங்களிடம் சொத்துப் பட்டியல் உள்ளதா? அதை தாக்கல் செய்யுங்கள்’’ என்றார். நாளை தாக்கல் செய்வதாக ஜெயலலிதா வக்கீல் கூறினார்.
அதன்படி வக்கீல் நாகேஸ்வரராவ் இன்று கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவின் ரூ.66 கோடி சொத்துக்கான மதிப்பீடு பட்டியலை தாக்கல் செய்தார். ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த சொத்துப்பட்டியலையும், புதிய மதிப்பீடு பட்டியலையும் இணைத்து அதில் உள்ள வேறுபாடுகளை குறிப்பிட்டு இருந்தார்.
அப்போது அரசு வக்கீல் பவானி சிங் இந்த பட்டியல் தவறான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்க கூடாது. தேவைப்பட்டால் அரசு தரப்பில் புதிய பட்டியல் தாக்கல் செய்கிறோம் என்று கூறினார்.
தி.மு.க. வக்கீல் சரவணனிடம் உங்கள் கருத்து என்ன? என்று நீதிபதி கேட்டதற்கு, இந்த பட்டியல் தவறாக உள்ளது என்றார்.
பின்னர் நீதிபதி குமாரசாமி கூறுகையில், ஜெயலலிதா சொத்து கணக்கை மதிப்பீடு செய்த அதிகாரி யார்? என்று கேட்டார்.
அப்போது அங்கு இருந்த புதிய விசாரணை அதிகாரி ஜெயலலிதா சொத்து பட்டியலை கணக்கிட்ட அதிகாரி நல்ல நாயுடு. தற்போது விசாரணை அதிகாரியாக தான் நியமிக்கப்பட்டு சிறிது காலமே ஆகிறது’’ என்றார். தொடர்ந்து அரசு வக்கீல் பவானிசிங் வாதாடினார். அப்போது ஜெயலலிதாவிடம் இருந்து தான் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு சொத்து வந்தது என்று குறிப்பிட்டார்.