இந்திய ராணுவத்தின் 42வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் தளபதியாக இருந்தவர் கர்னல் எம்.என். ராய் (39). தீவிரவாதத்துக்கு எதிரான பல்வேறு ஆபரேஷன்களில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது, கர்னல் எம்.எம். ராய் வீரமரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ராணுவத்தின் சார்பாக இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
கர்னல் ராயின் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெற்றது. டெல்லி கண்டோன்மண்டிற்கு கொண்டு வரப்பட்ட கர்னல் ராயின் உடலுக்கு உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் கர்னல் ராயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தீவிரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆபரேஷன்களில் கர்னல்
எம்.என்.ராய் பங்கேற்று, எண்ணற்ற வீர சாகசங்களை செய்துள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில், கடந்த திங்களன்று நடைபெற்ற 66வது குடியரசு தின விழாவில், ‘யுத்த சேவை‘ பதக்கம் வழங்கப்பட்டது. அதற்கு மறுநாளான செவ்வாயன்று, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராய் வீர மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ராயின் தேசப்பற்றையும் பறைசாற்றுகிறது.
உத்தரப்பிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்னல் எம்.என். ராய் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.