வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வந்த எட்டு முக்கியமான பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கடந்த வாரம் நாடு திரும்பியுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினருக்கு இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நாடு திரும்பியவர்களில் அதிகமானவர்கள் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் எனவும், சிலர் ஒப்பந்த அடிப்படையில் கொலைகளை மேற்கொள்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இவர்கள் நாடு திரும்பியுள்ளதாக புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது பிரச்சாரப் பணிகளுக்காக இவர்களை ஈடுபடுத்திக் கொள்ள இவ்வாறு அரசியல்வாதி பாதாள உலகக் குழு உறுப்பினர்களை அழைத்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பாதாள உலகக் குழு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அஞ்சி இவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்தனர்.
இரத்மலானை, புளுமென்டல் மாவத்தை மற்றும் படோவிட்ட ஆகிய பிரதேசங்களில் இந்த பாதாள உலகக் குழுவினர் செயற்பட்டு வந்ததாக புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.