.
வத்தளை – ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர்
தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவமொன்று 2015 மே மாதம் 7ம் திகதி பதிவானமை அனைவரும் அறிந்ததே. இந்த கொலையை புரிந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்.
பாத்திமாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த சுரேஷ் ,பாத்திமாவின் காதல் மறுப்பினால் வாழ்நாள் முழுவதும் தேவதாஸ் கோலம் பூண்டுகொள்ள விரும்பாமல் யாருமே எதிர்பார்க்காத ஒரு காரியத்தை செய்யத் துணிந்தான். அன்றைய தினம் பெரும் மழை பெய்யும் என்று கூறப்பட்டது. மக்கள் பெரும் மழைக்குள் சிக்குவதற்கு முன் தத்தமது ,வீடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்த நேரமது. வத்தளை, ஹெந்தலை சந்தியிலுள்ள பிரபல புடவைக்கடைக்குள் தனது காதலியான (19 வயது) பாத்திமாவைச் சந்திக்கும் முகமாக வழமை போல் நுழைகின்றான் சுரேஷ் (23வயது) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
“காதலியுடன் கதைப்பதற்காகத் தான் வருகின்றான் என்று அங்கு பணிபுரிபவர்கள் பலரும் எண்ணியவாறு, சிறிய புன்சிரிப்புடன் சுரேஷை வரவேற்றார்கள். எனினும், அவர்கள் அனைவரும் சற்றும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தை சில மணி நிமிடங்களுக்குள் செய்து முடித்தான் சுரேஷ்.
நேராகப் பாத்திமா இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றவன், சுற்றி இருப்பவர்களை பற்றி சற்றும் சிந்திக்காது தனது காற்சட்டைப் பையினுள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது ஆத்திரம் தீரும் வரை பாத்திமாவின் நெஞ்சுப் பகுதியில் குத்தினான். சுமார் 8 தடவைகளுக்கு மேல் சுரேஷின் கையிலிருந்த கத்தி பாத்திமாவின் நெஞ்சுப் பகுதியை பதம் பார்க்க, “நீரின்றித் தவிக்கும் மீனைப்” போல் வலியால் துடிதுடித்தாள். எனினும், அதன் பின்னும் சுரேஷின் ஆத்திரம் தீரவில்லை. பாத்திமா நிலத்தில் வீழ்ந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த நிலையிலும் கூட, எவ்வித ஈவிரக்கமுமின்றி பாத்திமாவின் உடலின் பல இடங்களில் ஆழமான காயங்களை ஏற்படுத்தினான்.
இதனைத்தொடர்ந்து, பாத்திமாவைத் தாக்கிய அதே கத்தியை எடுத்து தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக கழுத்தை அறுத்துக்கொண்டு. வலி தாங்க முடியாமல் நிலத்தில் வீழ்ந்து துடித்தான். உடனே புடவைக்கடையில் பணிபுரியும் பெண்கள் பலத்த சத்தத்துடன் சத்தமிட, வீதிப் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்தை வந்தடைந்தனர். அதன்பின் அங்கிருந்தவர்களின் உதவியுடன் இருவரையும் வத்தளைப் பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். எனினும், துரதிஷ்டவசமாக கொண்டு செல்லும் வழியிலேயே பாத்திமாவின் உயிர் அவளை விட்டுப் பிரிந்தது. மேலும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் ஆபத்தான நிலையில் றாகமை போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டான்.