மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த விசாரணைகளின் போது காணாமல் போனவர்கள் சார்பாக சட்டம் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
குறித்த விசாரணைகளின் போது காணாமல் போனவர்கள் சார்பாக சட்டம் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.சபூர்தீன் உட்பட சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, ஜெபநேசன் லோகு ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
இதன் போது குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது காணாமல் போன உறவுகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மன்றில் முன்வைக்கப்பட்டது.
விசேடமாக விசாரணைகளின் போது கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான மாதிரிகளை தயாரித்தல், அதனை சரியான முறையில் கைமாற்றுதல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கும், அதன் பரிசோதனைகளை சர்வதேச ரீதியிலே அங்கீகரிக்கப்பட்ட தடயவியல், தொல்லியல் துறையினர் மற்றும் தடயவியல், மானுடவியல் தொடர்பான சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இவை அனுப்பி வைக்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளினால் மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஏற்கனவே குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அவர்களினால் அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்பட்ட பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டது.
ஆனால் அவ்வாறான ஒரு பல்கலைக்கழகம் அமெரிக்காவில் இல்லை என்பது தொடர்பில் சட்டத்தரணிகளினால் ஆட்சேபனை மன்றில் எழுப்பப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மனித புதைகுழி காணப்பட்ட இடத்தில் கிணறு இருப்பதாக ஏற்கனவே சட்டத்தரணிகளினால் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த கிணற்றினை இன்று புதன்கிழமை (26) மாலை அடையாளப்படுத்த நீதவான் உத்தரவிட்டார்.