தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் ஆதரவாளரான பி.எச். பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
அவர் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவமனையில் உள்ள 27 சிசிடிவி கேமராக்களும் அகற்றப்பட்டன. கேமராக்களை அகற்றச் சொன்னது யார்? எனவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது பதிவான சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வெளியிட வேண்டும்.
மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்த அறிக்கையையும் வெளியிடவேண்டும். அவரது கைரேகையை பதிவு செய்த மருத்துவரை விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த 4 துளைகளுக்கு காரணம் என்ன?
ஏன் சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபிஸ்ட் வரவழைக்கப்பட்டார்? ஜெயலலிதாவை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதற்காக விமானம் வந்தபோது அதை வேண்டாம் என கூறியது யார்? ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டார் என மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் உள்ளது.
இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பி.எச்.பாண்டியன் தெரிவித்தார்.