கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தத்திற்கு எதிராக போராடி, யுத்தத்தை வெற்றிக் கொண்டவர்தான் இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார்.
நாம் நாட்டை பிளவுபடுத்துவதற்கு எதிராகத்தான் அன்று போரிட்டோம். எனவே, இனியும் நாட்டில் சமஷ்டிக்கு இடம்கிடையாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரை வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும், முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் ஒன்றே.
கருணா அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக நிச்சயமாக விசாரணை நடத்தியே ஆக வேண்டும். அரசியல் ரீதியாக நாம் இவரது கருத்தை முற்றாக நிராகரிக்கிறோம்.
அதேபோல், விக்னேஸ்வரனை எடுத்துக் கொண்டால் அவர் கடுமையான இனவாதியாகவே காணப்படுகிறார். கொழும்பில் பிறந்து, சிங்கள மக்களுடன் வாழ்ந்து, நீதியரசராக இங்கு கடமையாற்றி, வடக்கிற்கு சென்று சிங்கள மக்களுடன் வாழ முடியாது என்று கூறுகிறார்.
தமிழ் இளைஞர்கள் மத்தியில் சிங்கள மக்கள் தொடர்பான வெறுப்புணர்வையே அவர் விதைத்து வருகிறார். இவரது செயற்பாடுகள் தொடர்பாகவும் சட்டநடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
நாம் புலிகளின் உறுப்பினர்களை கொலை செய்தோம் எனக்கூறி என்றும் வாக்கு கேட்கவில்லை. நாம் போரிட்டது பயங்கரவாதத்திற்கு எதிராக.
நாம் அன்று போரிட்டு, யுத்தத்தை வெற்றி பெற்றதன் காரணத்தினால்தான் இன்று அனைவரும் ஐக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்துவருகிறோம். இதனை அனைத்து மக்களும் உணர்வார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.