பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் செல்போன் மூலம் பேசியிருந்தார். இது தொடர்பாக இரண்டு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகங்களும் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளன. ஆனால் இதில் முரணான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கனடா பிரதமர் இந்தியாவிடம் தடுப்பூசி தொடர்பாக உதவி கேட்டதாகவும் , அதற்கான உதவிகளை கண்டிப்பாக செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அதில் உலகம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தால் அதற்க் இந்தியாவின் பங்களிப்பும், குறிப்பாக பிரதமர் மோடியின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கனடா அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் கனடா பிரதமர் கொரோனா தடுப்பூசி பகிர்வது தொடர்பாக மட்டுமே பேசியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்தும் அதற்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்பது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்திய அரசின் அறிக்கையில் விவசாயிகள் போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்