வங்காளதேச அணிக்கு எதிரான ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேசத்துடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது நைம் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர்.
இதில் லிட்டன் தாஸ் 16 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் 10 ரன்களில் போல்ட் ஆனார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடி அரைசதத்தைக் கடந்த முகமது நைம், 52 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய முஸ்தாஃபிகுர் ரஹீம் சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு அசத்தினார். இறுதிவரை நிலைத்து நின்று ஆடிய அவர் 37 பந்துகளில்(5 பவுண்டரி, 2 சிக்சர்) 57 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் கருணாரத்னே, ஃபெர்னாண்டோ மற்றும் லாஹிரு குமாரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி தற்போது பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குசால் பெரேரா 1 ரன்னிலும், பதும் நிஷாங்கா 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த அசலங்கா, நிலைத்து நின்று ஆடி களத்தில் அதிரடி காட்டினார். அவருடன் ஜோடி சேர்ந்த பனுகா ராஜபக்சா அரைசதத்தைக் கடந்து அசத்தினார். 31 பந்துகளில் 53 ரன்கள் குவித்த பனுகா ராஜபக்சா, நசும் அகமது பந்துவீச்சில் போல்ட் ஆனார். மறுபுறம் 49 பந்துகளில் 80 ரன்கள்(5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசிய அசலங்கா இறுதிவரை நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து இலங்கை அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.