நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணவேண்டுமென மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது நினைத்திருந்தால் சிங்கள மற்றும் தமிழ் தரப்பில் யாருடைய எதிர்ப்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்த சபா குகதாஸ், அவ்வாறான ஒரு வாய்ப்பை தவறவிட்டு தற்போது நீலிக் கண்ணீர் வடிப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார். ரணில் உடன் இடம்பெறுகின்ற பேச்சுவார்தையை குழப்பாமல் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என நேற்றையதினம் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில் சபா குகதாஸ் இவ்வாறு விசனம் வெளியிட்டுள்ளார். தமிழர் தரப்பு முன்வைக்கின்ற உடனடிப் பிரச்சினைகளை நிபந்தனைகள் என கூறி, தென்னிலங்கை மக்களுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்யும் சிங்கள தலைவர்களால் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதற்கு, மகிந்த ராஜபக்ச போன்றோரின் அறிக்கைகள் சிறந்த எடுத்துக் காட்டு என்றும் சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களின் உடனடிப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணுகின்ற நல்லெண்ண வெளிப்பாட்டை ரணில் அரசாங்கம் நியாயமான முறையில் தீர்க்க முன் வராவிட்டால் தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்க செயற்பாட்டை வெற்றி கொள்ள முடியாது என்றும் எச்சரித்துள்ளார். தென்னிலங்கை மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் உள்ள இனவாத சிங்கள தலைவர்கள் இருக்கும் வரை நாட்டில் புரையோடிப் போய்யுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வுகான முடியாது என்றும் சபா குகதாஸ் ஆணித்தரமாக தெரிவித்தள்ளார். |