சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனனால் இவ்விடயம் தொடர்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது: இலங்கையைப் பொறுத்தமட்டில் தண்டனைகளிலிருந்து விடுபடல் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களிலும், அண்மைய நாட்களிலும் 'அநீதி' என்னும் பேய் நாட்டைப் பீடித்துள்ளது. நாட்டை முழுமையாக யுத்தத்துக்குள் தள்ளிய அரச அனுசரணையுடனான கறுப்பு ஜுலை கலவரங்கள் அரங்கேறி இவ்வாண்டுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற 26 வருடகாலப் போரின்போது பதிவான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை. போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையையும் நீதியையும்கோரி பல வருடங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு இங்கு முக்கிய பேசுபொருளாக அமையும். கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிக்கின்ற வலுவான சர்வதேசக்கட்டமைப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இருந்துவருகின்றது. ஆனால் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பரில் இவ்விவகாரத்தில் பேரவையின் வழமையான கடப்பாடுகளைப் புதுப்பிக்கின்ற தீர்மானத்துக்கு ஆதரவாகப் பெரும்பான்மையான உறுப்புநாடுகள் வாக்களிக்குமேயானால், இச்சர்வதேச தளத்தின் அழுத்தம் இல்லாதுபோகக்கூடும். சர்வதேசத்தின் இந்தக் கண்காணிப்பிலிருந்து விலகிச்செல்வதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் இப்பொறிமுறை வெற்றியளிப்பதற்கான எவ்வித சாத்தியப்பாடும் இல்லை. எனவே இவ்விடயத்தில் தாம் தவறாக வழிநடத்தப்படுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்புநாடுகள் இடமளிக்கக்கூடாது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை இணையனுசரணை வழங்கியிருந்த நிலையில், அதன் பிரகாரம் 'உண்மையைக் கண்டறியும் பொறிமுறை' ஒன்றை நிறுவுவதாக பேரவைக்கு இலங்கை வாக்குறுதியளித்தது. இருப்பினும் அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்தகால மீறல்களைக் கையாள்வதில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, முடிவுறுத்தப்படாத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கையிலெடுத்திருக்கின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதன் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமென இலங்கையின் அரசியல் வட்டத்தில் பெரிதும் நம்பப்படுகின்றது. அதுமாத்திரமன்றி இலங்கையானது தோல்வியடைந்த ஆணைக்குழுக்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் நாடுகளும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளும் இந்த ஆணைக்குழுவின் வெற்றிக்கு அவசியமான நிபந்தனைகள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதை இலங்கையிடம் எடுத்துரைக்கவேண்டும் என்று சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன் வலியுறுத்தியுள்ளார். |