கடந்த வெள்ளிக்கிழமை அனுராதபுரம் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டியவினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாரதிபுரம் பொலிஸ் நிலையத்திற்கு இணைக்கப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக கூடியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டனர். கொன்ஸ்டபிள் சந்திரத்ன பனாதர, கொன்ஸ்டபிள் நிமல் பிரேமசிறி கோனார, பொலிஸ் கண்காணிப்பாளர்; ஆர்.எம். ரணராஜ பண்டார, உப பொலிஸ் பரிசோதகர் வை.எல். சோமரத்ன, மற்றும் கொன்ஸ்டபிள் செனரத் பண்டார மெதவெல ஆகியோருக்கே இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பொலிஸ் நிலையம் தாக்கப்பட்ட பின்னர் கிராமத்தில் தேடுதல் நடத்தியதாக கூறியிருந்தனர். எனினும் குறித்த பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் 13 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்த பின்னர், வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் ஏனையோர் சாட்சியங்கள் இன்றி விடுவிக்கப்பட்ட நிலையில் 5 பேர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. |