தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றுக்கு அருகில் இருந்த மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை சுமார் 624 கிலோ கிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
245 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 380 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இன்று திங்கட்கிழமை இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இதன்போது வீட்டிற்கு அருகில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மூன்று லொறிகளில் இருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் அடங்கிய 10 பொதிகள் மற்றும் 6 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
5 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு ரி - 56 ரக துப்பாக்கியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வீட்டில் இருந்த மற்றுமொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இந்த லொறியின் சாரதி என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.