2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். 25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி இந்தக் கொலையில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும், திட்டத்தைத் திட்டமிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸ் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று நேபாள பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் சேர்த்து யாழ்ப்பாணத்தை தம்பதியினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் நாளை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறை, மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவு மற்றும் நேபாள பாதுகாப்புப் படையினர் நடத்திய சிறப்பு கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் வைத்து குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் கம்பஹா மற்றும் நுகேகொடையைச் சேர்ந்த இருவர் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதியினர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |