அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் ; திருமாவளவன்
காவிரி நீர் பிரச்னை தொடர்பாக விவாதிக்க முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தரவேண்டிய நீரை பெற மத்திய அரசு முயற்சி செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் காவிரி நதிநீர் ஊர்தி பயணத்தை சிதம்பரத்தில் இருந்து திருச்சி வரை செல்கிறார்.
சீர்காழிக்கு வந்த தொல். திருமாவளவன் புதிய பஸ் நிலையம் பகுதியில் பேசுகையில், தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு தராமல் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. வெள்ள காலங்களில் மட்டும் கேட்காமல் தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விடுகிறது. காவிரி நதி நீர் தொடர்பாக விவாதிக்க முதல்வர் ஜெயலலிதா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
100 நாள் வேலை திட்ட நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தலைஞாயிறு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை உடன் வழங்க வேண்டும் என்றார்.
பின்னர் வைத்தீஸ்வரன்கோவில் கடைவீதியில் அவர் பேசினார். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர். காவிரி நீர் உரிமை ஊர்தி பயண நிகழ்ச்சிக்கு கொள்ளிடத்தில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.