ஆடிட்டர் ரமேஷ் கொலை :நேரில் பார்த்த காவலாளி வாக்குமூலம் - 3 வாலிபர்களைத்தேடும் போலீசார்!
சேலத்தை சேர்ந்தவரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளருமான ஆடிட்டர் ரமேஷ் (வயது 55) நேற்று முன்தினம் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இவர்கள் ஆடிட்டர் ரமேசின் அலுவலகத்தின் கீழ் பகுதியில் காவலாளியாக பணியாற்றி வரும் ஜெயரா மனை (வயது 73) பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.
’’நான் சேலம் அம்மாப்பேட்டையில் வசித்து வருகிறேன். ஆடிட்டர் ரமேஷ் சார் வீடு உள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் பகல் நேரத்தில் இருந்து கண்காணிப்பேன். இரவு 9 மணிக்கு மேல் ஆடிட்டர் ரமேஷ் சாரின் அலுவலகம் கீழ் பகுதியில் இருந்து கண்காணிப்பேன்.
நேற்று முன்தினமும் இரவு ஆடிட்டர் ரமேஷ் அலுவலகத்திற்கு சென்று அமர்ந்து இருந்தேன். அப்போது ஆடிட்டர் ரமேஷ் வந்து அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அலுவலகத்தை பூட்டி மாடியில் இருந்து கீழே வந்து அவரது மொபட்டில் அமர்ந்து கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தார்.
அப்போது 3 வாலிபர்கள் அங்கு வந்தனர். இவர்களுக்கு வயது 20–ல் இருந்து 23 இருக்கும். நான் ஆடிட்டரிடம் ஏதோ பேச வருகிறார்கள் என நினைத்து என்ன என்று கேட்டேன். அப்போது ஒருவன் என்னை தடுத்து பேசாதே என கூறி பிடித்து கொண்டான். பிறகு 2 பேர் இரும்பு தடி போன்ற ஆயுதத்தில் ஆடிட்டரை தாக்கினர். இதில் அவர் தடுமாறினார். பின்னர் அவரை கத்தி போன்ற ஆயுதத்தால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் அப்படியே பொத்தென்று கீழே விழுந்து இறந்து விட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
பின்னர் மூன்று வாலிபர்களும் அரசு கல்லூரி உள்ள மெயின் ரோட்டிற்கு சென்று விட்டனர். மூன்று பேரும் தமிழில் பேசினர். ஒருவன் மட்டும் என்னை மிரட்டி கீழே அமர வைத்தான். மற்றவர்கள் ஏதும் பேசவில்லை. 3 பேரும் ஆடிட்டர் கொன்று விட்டு மெல்ல நடந்து சென்றனர்.
பின்னர் நான் ஆடிட்டர் அலுவலகம் கீழ் பகுதியில் வசிக்கும் சுகுமார் என்பவரின் மனைவியிடம் கதவை தட்டி தெரிவித்தேன். அவர் கதவை திறந்து பார்த்து போன் செய்து மற்றவர்களுக்கு தெரிவித்தார்’’என்று கூறியுள்ளார்.
காவலாளி ஜெயராமன் தெரிவித்த தகவல்கள், அவர் கூறிய வாலிபர்கள் அடையாளங்களை வைத்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.