தமிழ் மக்கள் மாவீரர் நாளை நினைவு கூருவதை தடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவீரர் நாளை நினைவு கூருவது சட்டவிரோதமானது என்று சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,
“மாவீரர்களை நினைவு கூரும் பெரியளவிலான நிகழ்வுகளை நடத்தும் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கவில்லை.
ஆனால், எமது செயலகங்களில் சிறியளவிலான நிகழ்வுகள் இடம்பெறக் கூடும்.
போரில் கொல்லப்பட்ட பொதுமக்களையும், விடுதலைப் புலிகளையும் அவர்களின் குடும்பத்தினர், நினைவு கூருவதற்கு உரிமை உள்ளது.
அத்தகைய நிகழ்வுகளை சிறிலங்கா அரசாங்கத்தினால் தடுக்க முடியாது.
அவ்வாறு தடுப்பது ஐ.நா பிரகடனத்தை மீறுவதாக அமையும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். |