அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான ஆயர்களுக்கு அனுமதி மறுப்பு
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அனுமதியுடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான ஆயர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கும் நோக்குடன் இவ்விரு ஆயர்களும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தனர். அதற்கு அமைச்சும் உரிய அனுமதியை வழங்கியிருந்தது.
இதன்படி நேற்றுக் காலை தமிழ்க் கைதிகளைப் பார்வையிடுவதற்கு மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை அநுராதபுரம் சென்று, அங்குள்ள ஆயரையும் அழைத்துக் கொண்டு சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாரானார். அதன் போதே அனுமதி மறுக்கப்பட்ட விடயம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பொன்றின் மூலமே அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவகாரம் தமக்குத் தெரியப்படுத்தப்பட்டது என்றும், பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவரின் கட்டளையின் பிரகாரமே தாம் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்றும் அதிலும், குறிப்பாக மன்னார் ஆயருக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனத் தாம் அறிந்தார் என்றும் மன்னார் ஆயர் குறிப்பிட்டார்.
சமாதானத்தையும், மனிதநேயத்தையும் போதிக்கும் இன்றைய புனித நாளில், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை எமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையானதொரு நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிக்கும் விடயத்தில் இத்தகைய சம்பவங்கள்தான் தாக்கத்தை தடங்கலை ஏற்படுத்துகின்றன.
எமக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இராயப்பு ஜோசப் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.