தேர்தலில் 117 ஆசனங்களைக் கைப்பற்றி நாம் ஆட்சியமைப்போம் ஐக்கிய தேசியக் கட்சியின் மடியில் அமர்ந்து கொண்டு தேசிய அரசொன்றை ஒருபோதும் அமைக்கமாட்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டம் நிக்கவரெட்டிய பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
100 நாள்களில் அனைத்தையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி வழங்கினர். ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றினார்களா? ஓகஸ்ட் 18ஆம் திகதியின் பின்னர் நெல்லுக்கு 50 ரூபா வழங்கப்படும். விளையும் நெல்லை வைத்திருங்கள். 50 ரூபாவுக்கு நான் எடுப்பேன். ஐக்கிய தேசியக் கட்சி அரசின்கீழ் விவசாயிகளுக்கு எந்த இடமும் வழங்கப்படாது.
எமது கலாசாரத்துக்கு இடமில்லை கப்பல் வரும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய யுகத்தை நாம் இல்லாதொழித்தோம். அந்த யுகத்தை மீண்டும் கொண்டு வரத்தான் இவர்கள் பார்க்கின்றனர்.
போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால் தான் இன்று எம்மீது இவ்வாறு குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.
இராணுவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்து பாதுகாக்கப்பட்ட இந்த நாட்டை மீண்டும் பிளவுபடுத்த இடமளிக்க முடியாது.
போருக்கு இல்லாத வாள், பலாக்காய் கொத்தவா?’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதுபோல போரின் போது இல்லாத தேசிய அரசு இப்போது எதற்கு? என்றும் கேள்வி அவர் எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.