டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுப் பேரணியில் பேசிக் கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் அவருக்கு எதிராக கோஷமிட்டு அவர் மீது மையை வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெல்லி நகரில் மாசு அதிகமாகி சுற்றுச்சூழல் பாதிக்கப்படைந்து வருகிறது. இதனால் வாகனப் புகை மாசுவை கட்டுப்படுத்த மாநில முதல்வர் கெஜ்ரிவால் முடிவு செய்தார். இதையடுத்து, வாகனப்புகை அளவை கணக்கிட ஒற்றை, இரட்டைப்படை இலக்கங்கள் கொண்ட வாகனங்களை ஒருநாள் விட்டு ஒரு நாள் இயக்கும் சோதனை ஓட்ட திட்டம் கடந்த 1-ந்தேதி டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சோதனை 15 ஆம் தேதி வரை நடைபெற்றது.
டெல்லி அரசின் இந்த சோதனை அடிப்படையிலான திட்டம் மாபெரும் வெற்றி பெற்றதாக கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள சத்தரஸல் மைதானத்தில் இந்த திட்டத்தின் வெற்றி விழாவின் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அரவிந்த் கெஜ்ரிவால் விழாவில் பேசிக்கொண்டு இருந்த போது, மேடை அருகே வந்த ஒரு பெண் தீடிரென கெஜ்ரிவால் மீது மை வீசினார். இதில் கெஜ்ரிவாலின் முகத்தில் சில மைத்துளிகள் விழுந்தது. உடனடியாக, அந்த பெண்ணை மடக்கி போலீசார் பிடித்தனர். ஆனால், மை வீசிய பெண்ணை விட்டுவிடுமாறு கூறிய கெஜ்ரிவால், டெல்லிக்கு ஏதாவது நல்லது நடைபெற்றால், இதுதான் நடக்கும். அவர் போகட்டும், அவரை விட்டுவிடுங்கள் என போலீசாரை கேட்டுக்கொண்டார்.
பலத்த பாதுகாப்பையும் மீறி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மை வீசிய பெண், தனது பெயர் பாவனா எனவும், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி சேனாவை சேர்ந்தவர் என்று கூறினார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.