சந்தேகநபர் காலி மற்றும் நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேரிடம், கனடாவில் வேலை பெற்றுத் தருவதற்காக தலா 13 இலட்சம் ரூபாய் வீதம் பணம் பெற்றுள்ளார். பணம் பெற்றுக் கொண்டும் உறுதியளித்தபடி வெளிநாட்டு வேலைகளை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் SLBFE இல் முறைப்பாடு செய்தனர். இதன்பேரில் செயற்பட்ட அதிகாரிகள், வரக்காபொல, அம்பகலகந்த பிரதேசத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது, அவரது வீட்டிலிருந்து சைப்ரஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி தலா 75,000 ரூபா பெற்றுக் கொண்ட மூன்று ஒப்பந்த ஆவணங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இதேவேளை, சுவிட்சர்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 17 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த (17) ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்காததால் பாதிக்கப்பட்டவர் SLBFE இல் முறைப்பாடு செய்தார். குறித்த சந்தேகநபர் கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவராவார். குறித்த முறைப்பாட்டின் பேரில் அதிகாரிகள் பலமுறை முயற்சி செய்தும், அவர் அதிகாரிகளைத் தவிர்த்து தலைமறைவாக இருந்துள்ளார். பின்னர், அவர் பணிபுரியும் தனியார் வைத்தியசாலையில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் விசாரணை அதிகாரிகள் அங்கு சென்று அவரைக் கைது செய்து களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அதன்படி, குறித்த பெண்ணை இந்த மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். |