வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்கவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான ந. குமரகுருபரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழர்களுக்கு பலம் சேர்ப்பதாக இருக்கவேண்டுமே தவிர தமிழர்களின் பலத்தை இழக்கச் செய்வதாக அமைந்துவிடக்கூடாது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழித்து மாகாணசபை முறைமையினை அடியோடு அழிக்க அரசாங்கம் முயன்றுவருகின்றது. இந்த யதார்த்த அரசியலை புரிந்து கொண்டு வடமாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பை ஆதரிக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வரவேண்டும்.
மாகாணசபை முறைமையினை ஒழிக்க முயலும் அரசாங்கத்தின் கைக்கூலிகள் இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதை தடுக்கவேண்டும். இதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்பை ஆதரிப்பதே ஒரே வழியாகும். மாகாணசபைகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமையாவிட்டாலும், இந்த இடைவௌியை அரசுக்கு ஆதரவாக மாற்றாது தமிழர் தலைமைக்கு வலுச்சேர்க்கவேண்டும்.
கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரிடம் நான் கோரியுள்ளேன். தற்போதைய நிலையில் அதுவே அவசியமானதாகும்.