மேல்மருவத்தூரில் நவராத்திரி விழா
- நவராத்திரி விழா தொடக்கத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் பங்காரு அடிகளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வெள்ளிக்கிழமை நவராத்திரி விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா சித்தர் பீடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.
கருவறையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தங்க கவசம் சாத்தப்பட்டது. ÷தொடர்ந்து லட்சுமி பங்காரு அடிகளார் சிறப்பு ஆராதனை செய்தார். காலை சித்தர் பீடத்துக்கு வந்த பங்காரு அடிகளாருக்கு பாத பூஜைகள் செய்து பக்தர்கள் வரவேற்றனர்.
பிரகாரத்தை வலம் வந்த அவர் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு தீபாராதனை செய்தார். தொடர்ந்து சுயம்பு அம்மனுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை பகல் 12.15 மணிக்கு ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து பகல் 12.45 மணிக்கு அகண்ட தீபத்தில் பங்காரு அடிகளார் முக்கூட்டு எண்ணெய் ஊற்றியதைத் தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முக்கூட்டு எண்ணெய் ஊற்றி வழிபட்டனர். ÷தொடர்ந்து மாலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு, 261 யாக குண்டங்கள் அமைத்து குடும்பங்கள் நலம் பெறவும் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடையவும் சிறப்பு மகா வேள்வி நடைபெற்றது.
இதில் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு யாக குண்டத்தில் சமித்துகளையும், நவதானியங்களையும் போட்டு வழிபாடு நடத்தினர். ÷கோயில் வளாகத்தில் நவராத்திரி கொலு மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப. செந்தில்குமார் மற்றும் தேவி ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.