224 பேர் பலியான குண்டு வெடிப்பில் தொடர்பு: அல்கொய்தா இயக்க தலைவர் பிடிபட்டார்
ஆப்பிரிக்க நாடுகளில் குண்டு வெடித்து 224 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய அல்கொய்தா இயக்க முக்கிய தலைவர் பிடிபட்டார். அமெரிக்க ராணுவம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தது.
லிபியா, சோமாலியாவில் திடீர் வேட்டை
கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் இந்தியர்கள் உள்பட 67 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் சோமாலியாவை சேர்ந்த அல்-சாபாப் என்ற தீவிரவாத இயக்கம் ஈடுபட்டது. இவர்கள் பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
ஆகவே அல்-சாபாப் தீவிரவாதிகளுக்கு எதிரான தீவிர வேட்டையில் அமெரிக்க சிறப்பு அதிரடிப்படை இறங்கியது. லிபியா மற்றும் சோமாலியாவில் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
அல்கொய்தா தலைவர் சிக்கினார்
லிபியா தலைநகர் திரிபோலி அருகே நடத்திய வேட்டையில் அமெரிக்க ராணுவத்திடம் அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய தளபதி அனாஸ் அல்-லிபி என்கிற நஜி அப்துல்-ஹமீத் அல்-ரூகை (49) என்பவர் பிடிபட்டார். இவர் லிபியா நாட்டில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஆவார். இவர் உயிருடன் பிடிபட்ட விவரத்தை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்தனர்.
குண்டு வெடிப்பில் தொடர்பு
பிடிபட்ட அல்-லிபி கடந்த 1998-ம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவில் நடைபெற்ற அமெரிக்க தூதரம் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர். இந்த குண்டு வெடிப்புகளில் சுமார் 224 பேர் பலியானார்கள்.
இதனால் இவருடைய தலைக்கு அமெரிக்கா ரூ.30 கோடி பரிசு தொகை அறிவித்தது. பல ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்த இவர் கடந்த ஆண்டு திரிபோலியில் சுற்றித்திரிவது தெரியவந்தது. அதன்பிறகு அவரை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வர, இப்போது சிக்கி விட்டார்.
சோமாலியா இயக்க தலைவர் பலியா?
சோமாலியா நாட்டில் உள்ள பராவே நகர் பகுதியில் அல்-சாபாப் இயக்க தலைவரை குறிவைத்து அமெரிக்க கடற்படையில் சிறப்பு பிரிவினர் கடும் தாக்குதல் நடத்தினர். இந்த நடவடிக்கையில் தீவிரவாத இயக்க தலைவரை கொன்ற பிறகே அமெரிக்கப் படைகள் வாபஸ் ஆனதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வமாக உறுதியாகவில்லை.
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், இந்த நடவடிக்கையில் அல்-சாபாப் இயக்கத்தை சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் உயிர் இழப்போ, காயமோ ஏற்படவில்லை என்றனர். அல்-சாபாப் இயக்கம் தரப்பில் தெரிவிக்கையில், எங்கள் முகாம் மீது வெளிநாட்டு வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் ஒரு வீரரை தியாகம் செய்தோம் என்கிறது.
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி கருத்து கூறும்போது, ’தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா நிறுத்தாது என்பது இதன் மூலம் தெளிவாக உறுதி செய்யப்படுகிறது. இவர்கள் புகலிடம் தேடி ஓடுகிறார்கள். இவர்களை பிடித்து நீதிமன்றம் முன் நிறுத்துவோம்’ என்றார்.