எனவே மனித உரிமை விடயங்களை உரிய முறை
யில் கையாளுமாறு சர்வதேச அழுத்தம் அதிகரிக்க கூடிய நிலைமைகள் உருவாகலாம். பொதுவுடமை வாதிகளான நாம் இந்தப் பாதையில் முற்று முழுதாக பயணிக்க முடியாது. இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தங்கள் எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்த நிலை காணப்படுகின்றது.
இத்தகைய போராட்ட நிலைமைகளை திசை திருப்பும் நோக்கத்துடன் ஏனைய தேசிய இனங்களை வருத்துகின்ற செயற்பாடுகள் அதிகமாக முன்னெடுக்கப்படுகின்றன. பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதன் மூலம் தனது அரசியல் இருப்பை தொடர்ந்தும் உறுதிப்படுத்தவும் ஆட்சியாளர்கள் முனைகின்றனர்.
இன்று தென் இலங்கை மக்களுக்கு தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகள் அவர்களுக்கு உரிய அதிகாரப்பகிர்வுகள் சுயாட்சி உரிமைகள் இவற்றுக்குள்ளே முஸ்லிம் மக்களுக்கான உரிமைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பதில் ஆர்வம் காட்டப்படாத நிலை காணப்படுகின்றது. இது கவலை தரும் விடயமாகும்.
தென்னிலங்கையில் முழு மக்களும் இனவாதிகள் அல்லர். ஒரு சிறு பிரிவினர் இனவாதிகளாக உள்ளனர். எனது முன்னை நாள் நண்பர் வாசுதேவ நாணயக்கார தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு ஜனாதிபதி ராஜபக் ஷவே தடையாக இருக்கின்றார் எனக் கூறியுள்ளார். இது முற்று முழுதான உண்மையாகும். உண்மையில் ஆட்சித்தளத்தினுள் அரசியல் தீர்வுக்கு சார்பாக சக்திகள் உள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கூட இத்தகைய போக்கை உடையவர்கள் உள்ளனர். எனவே தென்னிலங்கை மக்கள் மத்தியில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக கருத்து முன் வைப்புக்கள் பல வழிகளில் முன்னெடுக்கப்பட வேண்டும். இத்தகைய பாதையை பிழையென யாரும் கூறுவார்களாயின் அதை ஒரு போதும் ஏற்க முடியாது.
இன்று பலர் சர்வதேச சக்திகளின் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டுக்கு தமிழ் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய யுத்தத்தை முன்நின்று நடத்தியவர்கள் இதே சர்வதேச சக்திகளே குறிப்பாக அமெரிக்க பிரித்தானிய இந்தியா இதில் முதன் நிலையில் நின்றன. பிரபாகரனின் உயிர் பிரியும் வரை இவர்கள் யுத்தத்தை ஊக்குவித்தனர்.
இன்று இவர்கள் அரசியல் தீர்வைத் தருவார்கள் என நம்பிக்கை கொள்ள முடியுமா? தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட கொடுமைகளின் கறைகள் இவர்களின் கைகளில் இன்றும் உள்ளன. இதைச் சுத்தம் செய்யவே இன்று பல நாடகங்களை நடத்துகின்றனர். எனவே பேரினவாத தளத்தில் உயிர் வாழ நினைக்கும் இந்த ஆட்சித்தளம் முதலில் வீழ்த்தப்பட வேண்டும். இதன் மூலமே விடுதலைக்கான முதற்படியை நாம் எட்ட முடியும். இந்த இலக்கை அடைய தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் ஒன்றிணைந்த பொது முன்னணி உருவாக வேண்டும்.
இத்தகைய முயற்சிகளில் நாம் கடந்த காலங்களில் ஈடுபட்டே வந்தோம். அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பை உருவாக்கினோம். இதில் நான் மனோகணேசன், அசாத்சாலி சுமந்திரன் ஆகியோர் இணைந்து செயற்பட்டோம். துரதிஷ்டமாக தேர்தல் வந்தவுடன் தத்தமது இனக் குழுமங்களின் தலைவர்களாக நாம் மேல் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எமது தலைவர்கள் செல்ல முற்பட்டதால் நாம் உருவாக்கிய அணி ஒரு பொது அமைப்பாக தேர்தலில் போட்டியிட முடியாமல் போய் விட்டது. இத்தகைய ஐக்கியம் சிதைந்து தனியாக போட்டியிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
தமிழ் மக்களின் போராட்ட நியாயப்பாடுகள் தொடர்பாக தென்னிலங்கையைச் சேர்ந்த நான் கருத்துக்களை முன்வைத்தால் அந்த கருத்துக்கள் ஏனையவர்களின் கருத்துக்களை விட அதிக தாக்கத்தை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தாக்கத்தைச் செலுத்தும்.
பிரித்தானிய பராளுமன்ற வளாகத்தினுள் நடைபெற்ற நிகழ்வொன்றில் யுத்த இழப்புக்கள் தொடர்பாக அங்கே உண்மை நிலைகளை ஏற்காத நிலை காணப்பட்டது. ஆனால் இறுதி யுத்தத்தில் 1½ லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தேன். கூட்டம் முடிந்த பின் பல பிரதிநிதிகள் எனது கருத்தை ஆதரிக்கும் நிலை காணப்பட்டது. இன்று தென்னிலங்கையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இத்தகைய கால கட்டத்தில் தமிழ் மக்களின் போராட்டங்கள் தொடர்பாக தென்னிலங்கை மத்தியில் செயற்பட எனக்கு மக்கள் அங்கீகாரம் தேவை. எனவே இந்த தேர்தல் மூலமாக எனக்கு அங்கீகாரத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.