வட்டரக்கே விஜித தேரருக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதென்று பொதுபலசேனா அறிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததன் மூலம் பௌத்த தர்மத்தை காட்டிக்கொடுப்பதாக குற்றம் சுமத்தி பொதுபலசேனா, வட்டரக்கே விஜித தேரருக்கு எதிராக மேற்கொண்டு வந்த நடவடிக்கையை நிறுத்தப் போவதாக பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.
மஹியங்கனை ரொட்டவெல மகாவெலி விஹாரையின் மகாநாயக்கரான வட்டரக்கே விஜித தேரர், தமக்கு எதிராக பொதுபலசேனா மேற்கொண்டு வரும் வன்முறைகள் தொடர்பில் அண்மையில் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
தம்மை கொல்வதற்கு பொதுபலசேனா முயற்சித்ததாகவும் விஜித தேரர் முறையிட்டிருந்தார்.
இதேவேளை வட்டரக்கே விஜித தேரரை தேசிய சங்க சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பொதுபலசேனாவுக்கு ஆதரவான மாகாண தேசிய சங்க சபையும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
இந்தநிலையிலேயே நேற்று அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சு அலுவலகத்தில் விஜித தேரர் ஒழிந்திருப்பதாக கூறி பொதுபலசேனா முற்றுகை போராட்டத்தை நடத்தியது.
எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையிலேயே வட்டரக்கே விஜித தேரருக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதென்று பொதுபலசேனா அறிவித்துள்ளது.