பூந்தமல்லியில் காங்கிரஸ் கட்சியின் 130-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நடிகை குஷ்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியபோது, ‘’காமராஜர் வளர்த்த கட்சி குஷ்புவின் பின்னால் போகிறது என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசி உள்ளார். ஆனால் அப்படி இல்லை. நான் தான் காமராஜர் வளர்த்த கட்சியில் இணைந்துள்ளேன். சினிமாவில் நடிக்கிறவர்கள் கட்சியில் சேரக்கூடாதா? ரஜினியை தங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று நீங்கள் அழைப்பு விடுக்கவில்லையா?.
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும். பகவத் கீதையை தேசிய நூலாக மாற்ற வேண்டும் என்று கூறி விட்டு பின்பு மன்னிப்பு கேட்கின்றனர். இது பாராளுமன்றமா? அல்லது பாவ மன்னிப்பு கேட்கும் தேவாலயமா? என்று தெரியவில்லை.
நேரு, இந்திராகாந்தி, சோனியாகாந்தி ஆகியோருக்கு மட்டும் தான் பெண் உரிமையை பற்றி தெரியும், 2016-ல் காங்கிரஸ் கட்சியின் பலம் தெரியவரும்.
பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைத்தது முதல் மதமாற்றம் ஏற்படுத்துகிறார்களே தவிர, வேறு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை’’என்று தெரிவித்தார்.