தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது பற்றி வெளியுறவு துறை அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சென்னையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமான கும்மிடிப்பூண்டிக்கு பார்வையிட சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் அகதிகள் முகாம் எப்படி செயல்படுகிறது? இங்குள்ள அகதிகளின் வாழ்வாதாரம் எந்த அளவு உள்ளது? அவர்களுக்கு மேலும் என்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்பது பற்றி விரிவாக ஆய்வு செய்ய உள்ளேன்.
இந்தியாவில் அகதிகளாக வந்து தங்கி உள்ளவர்களை மத்திய, மாநில அரசுகள் நல்லமுறையில் கவனித்து வருகிறது. மத்திய அரசின் சார்பில் அவர்களுக்கு என்ன வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதை ஆய்வு செய்வேன்.
அகதிகள் முகாமில் உள்ளவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இலங்கைக்கு செல்ல விருப்பம் இல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப்பட்டு சுதந்திரமாக வசிப்பது பற்றி மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடையாது.
முகாம்களில் உள்ளவர்கள் வசதியாக வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து கொடுப்பதே எங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார்.