வேலூர் மாவட்டம் ஆம்பூரில் போலீசாரைக்கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்பூர் பூந்தோட்டத்தை சேர்ந்த சகில் அகமதுவை போலீசார் தாக்கியதில் உயிர் இழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அவரது உயிரழப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, அப்பகுதி மக்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு மறியலில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்த வழியே வந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய மக்கள், பேருந்து ,இருசக்கர வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை தீவைத்து கொளூத்தியதால் பதட்டம் ஏற்பட்டது.
மதுக்கடையையும் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். வன்முறை வெடித்ததை அடுத்து தடியடி நடத்தி போலீசார் அவர்களை விரட்டினர்.
அப்போது சிதறி ஓடிய போராட்டக்காரர்கள் போலீஸ் மீது மீண்டும் கல்வீசிதாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 30 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாத், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நிலைமை தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்தார். படுகாயமடைந்த 30 போலீசாரில் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.
சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துக்களின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களின் சம்பவங்கள் குறீத்து ஆய்வு செய்துவரும் ஏடிஜிபி ராஜேந்திரன், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவ்ர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார். அவர் மேலும், சம்பவத்திற்கு காரணமான காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆம்பூரில் தற்போது அமைதி நிலவினாலும் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளனர்.