காங்கேசன்துறை சந்தி வரையிலாவது மக்களை மீள குடியமர்த்த அனுமதிக்க வேண்டும் என்று பலாலியில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் அரச அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி வசந்த பண்டார தலைமையில் பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தில் நேற்றுக் காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுகளில், காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமையினால் மக்கள் தம்மைக் கடுமையாக நெருக்குவதாக அரச அதிகாரிகள் இதன் போது சுட்டிக்காட்டினர்.
இராணுவத்தினரால் நடத்தப்படும் தல்செவன விடுதிக்குச் சகல மக்களும் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர். அப்படியிருக்கையில் ஏன் தங்களை மட்டும் மீளக்குடியமர அனுமதிக்கவில்லை என்று மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். மக்களைச் சமாளிக்க முடியாமல் இருக்கின்றது. எனவே கே.கே.எஸ். சந்தி வரையிலாவது விடுவியுங்கள் என்று அரச அதிகாரிகள் இதன்போது வலியுறுத்தினர்.
அரச அதிகாரிகளின் வலியுறுத்தல்களுக்கு இராணுவ அதிகாரிகளோ, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரோ எந்தப் பதிலையும் வழங்கவில்லை. மேலும், பலாலி வீதியின் கிழக்குப் புறமாகவுள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் ஒரு சில பகுதிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாகவும் இந்தக் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.