காட்சிப்படுத்தப்பட்ட, தடை விதிக்கப்பட்ட விலங்குகளில் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கோரியும், இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரியும் இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 11 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததன் மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அவமதித்துவிட்டதாக கூறி, இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறியுள்ள மனுதாரர்கள், காட்சிப்படுத்த, தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் ஏற்கனவே காளைகள் இடம்பெற்றிருந்தது என்றும், அதை நீக்கி கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை சட்டத்திற்கு புறம்பானது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூரிடம் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
ஜல்லிக்கட்டு மீதான எந்த வழக்கின் மீதும் தங்களின் கருத்தை அறிந்த பின்னரே உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 13 வழக்குகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருவதாக இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 3 பேர் கொண்ட அமர்வில் வழக்கை விசாரிக்க நீதிபதி பானுமதி அறுத்துவிட்டதால் மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.வி.ரமணா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.