புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2016

கருணாநிதியின் மேலவை கனவு பலிக்குமா?

மீண்டும் தமிழகத்தில் சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அதிரடியாக கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் கொண்டுவர கடந்த 1989-ம் ஆண்டு முதல் கருணாநிதி பகீரத பிரயத்தனம் செய்துவருகிறார். ஆ
னால் புளித்த பழம்போல கருணாநிதிக்கு கடைசிவரை  அந்த மேலவை கனி கிடைக்கவே இல்லை. இந்நிலையில் மீண்டும் திமுக தேர்தல் அறிக்கையில் தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் கருணாநிதி. 

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை என்பது தமிழ்நாடு சட்டமன்றம் ஈரங்க அவையாக இருந்த காலகட்டத்தில்,  அதன் மேலவையாக இருந்தது. இந்த அவையின் உறுப்பினர்கள் நேரடி மற்றும் மறைமுகத் தேர்தல்கள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில உறுப்பினர்கள் மாநில ஆளுனரால் நியமிக்கப்பட்டனர். அரசியலமைப்புச்சட்டத்தின்படி மேலவை ஒரு நிரந்தர அமைப்பு.  ஆறாண்டுகள் பதவிக் காலம் கொண்ட இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர்.

தமிழகத்தில் 1921-ம் ஆண்டு முதல் சட்ட மேலவை செயல்பட்டு வந்தது. 465 உறுப்பினர்களாக இருந்த இதன் எண்ணிக்கை 1965ம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 என நிர்ணயிக்கப்பட்டபோது,  அந்த கணக்கின்படி 78 ஆகக் குறைக்கப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த தமிழக சட்டமன்ற மேலவையை  கடந்த 1986- ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அதிரடியாக கலைத்தார். 

மேலவையில் அவரது அரசியல் எதிரியான கருணாநிதியின் தீவிர செயல்பாட்டை முடக்க,  எம்.ஜி.ஆர் செய்த சாதுர்யமான செயல் என அப்போது இது விமர்சிக்கப்பட்டது. இன்னொரு தரப்பினர்,  எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட பழிதீர்க்கும் செயலாக அவரது இந்த முடிவை விமர்சனம் செய்தனர். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், திமுகவில் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட முதல் கவுரவம் எம்.எல்.சி. பதவிதான்.

1986-ம் ஆண்டு மே 14 ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இதற்கான தீர்மானம், பின்னர் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து மேலவை கலைக்கப்பட்டது. மேலவை கலைக்கப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் 'சிலம்புச்செல்வர்' ம.பொ.சி. எதிர்க் கட்சித் தலைவராக இருந்தவர் கருணாநிதி. ம.பொ.சி க்கு மனவருத்தத்தை தந்த நிகழ்வு அது. பழுத்த அனுபவஸ்தர்களும்,  தேர்ந்த அறிஞர்களும், அறிவார்ந்த நிபுணர்களும் இடம்பெற்ற  அந்த அவை,  எம்.ஜி.ஆரால் அரசியல் காரணங்களுக்காக கலைக்கப்பட்டபோது,  அது நடுநிலையாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.
அதிகாரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அரசியலில் அஞ்ஞான வாசம் செய்துகொண்டிருந்த திமுக தலைவருக்கு,  தான் வகித்துவந்த பொறுப்பிலிருந்து கவிழ்த்துவிடப்பட்டது அவரின் மனதை  அரித்துக்கொண்டே இருந்ததாலோ என்னவோ,  1989-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபின் மீண்டும் மேலவையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கான தீர்மானம், 1989-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1990-ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி மாநிலங்களவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால்,  மக்களவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. 

இதற்காக அப்போதைய பிரதமர் வி.பி.சிங் எடுத்த முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இந்நிலையில் 1991ம் ஆண்டு திமுக அரசு கலைக்கப்பட்டது. அடுத்துவந்த தேர்தலில் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரானார். முந்தைய ஆட்சியில் திமுக கொண்டுவந்த மேலவைக்கான தீர்மானத்தை ரத்து செய்து, கருணாநிதிக்கு அதிர்ச்சி தந்தார் ஜெயலலிதா.

மீண்டும் 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக,  மீண்டும் மேலவையைக் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியது. அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில் அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. எரிச்சலான கருணாநிதி,  அத்துடன் அந்த பிரச்னையை கைகழுவிட்டு அடுத்த வேலையில் மூழ்கிப்போனார். மீண்டும் 2006 ல் ஆட்சிக்கு வந்த திமுக,  மீண்டும் தன்  மேலவை கனவுக்கு உயிர் கொடுத்தது. மேலவையைக் கொண்டு வர தன் ஆட்சியின் இறுதிநாட்களில் அவசரம் காட்டியது அக்கட்சி. 
இதற்கான தீர்மானம் 2010 ஏப்ரல் மாதம் 12ம் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு,  அன்றே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கருணாநிதி தந்த அழுத்தத்தால் மத்திய அரசு இதை நாடாளுமனறத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்றி,  2010ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்,றி அதன்படி மீண்டும் மேலவை அமைக்கப்பட்டது. 

ஆனால் திமுக எதிர்பாராதவிதமாக,  2011 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தபின் இந்த திட்டம் கைவிடப்பட்டது. கருணாநிதியின் நிறைவேறாத ஆசைகளின் பட்டியலில் மேலவையும் உட்கார்ந்துகொண்டது. மீண்டும் 2016 தேர்தலில் அந்த ஆசைக்கு உயிர்கொடுக்க முனைந்திருக்கிறார் கருணாநிதி. 

சட்ட மேலவை உறுப்பினர்களின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 40,  அதிகபட்சம் 78 உறுப்பினர்கள். இவர்களில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும், 12ல் ஒரு பகுதி உறுப்பினர்கள் பட்டதாரிகளாலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் 12ல் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஆசிரியர்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவகர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து ஆளுநரால் நியமனம் செய்யப்படுவர். ஆளுநர் என்றாலும் இந்த பதவிகளின் பின்னணியில் ஆளும் அரசுதான் இருக்கும் என்பது சிறுகுழந்தையும் அறிந்தசேதி.
2011 -ம் ஆண்டு மேலவையை ரத்து செய்வதற்கான தீர்மானம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டபோது 'செல்வாக்கு படைத்தவர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்க வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு முறைதான் சட்டமன்ற மேலவை. ஆளும் கட்சியினர் தமக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்துகொள்ளவே மேலவை வழிவகுக்கும். வர்க்க ரீதியான பிளவைக் கொண்டுவரவே இது உதவும்' என்று பழுத்த அனுபவசாலியான தேமுதிக உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன் தன் கருத்தை பதிவுசெய்தார். பழுத்த சட்டமன்ற அனுபவமுள்ள பண்ருட்டியாரின் அன்றைய கூற்று உண்மைதான்! 

மேலவையை தமிழகத்தில் கொண்டுவரப் போராடும் கருணாநிதின் ஆர்வத்தின பின்னணியில் அரசியல் திட்டமும் உள்ளது என்கின்றனர் விபரமறிந்தவர்கள். 

இன்றைய அரசியல் களம் என்பது சேவையை இரண்டாம்பட்சமாக கொண்டு ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு மிக்க பதவிகளை நோக்கி ஓடும் இளைஞர்களால் நிரம்பியிருக்கிறது.  வயது, அனுபவம் இவற்றால் அவற்றை அடையும் பொறுமையும் பக்குவமும் அவர்களுக்கு இல்லை. இதனால் கட்சியின் எதிர்கால போக்கினை திட்டமிடும் இளைஞர்களை திருப்திப்படுத்த,  ஆட்சி அதிகாரப்பதவிகளை தானமாக வழங்கும் நெருக்கடி இன்றைய கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

வழக்கமான தேர்தல் நேர சம்பிரதாயங்களிலேயே தலைமையுடன் முரண்பட்டு,  தனி அணி காணும் வழக்கம் உருவாகிவிட்ட இன்றைய சூழலில்,  பெரிய கட்சியான திமுகவும் இத்தகைய சவால்களை சந்திக்கவேண்டிய நெருக்கடியில் உள்ளது.  234 சட்டமன்ற தொகுதிகளும் 40 பாராளுமன்ற தொகுதிகளும் அதற்கு தீனி போடமுடியாத நிலையில் மேலவை ஒருவகையில் அதை சரிகட்ட உதவும் என நம்புகிறது திமுக. அதற்காகவே மேலவையை தங்கள் முதுகில் கட்டிக்கொண்டே அரசியல் பயணத்தை தொடர்கிறது அக்கட்சி. 

இந்த முறையாவது திமுகவின் மேலவை கனவு நிறைவேறுகிறதா பார்ப்போம்!

ad

ad