ஜனவரி 31ல் கட்சி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல் நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சித் தொடங்கப் போவதில்லை என்று கூறிவிட்டார் ரஜினிகாந்த். “என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்கவிரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்” என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினியின் இந்த அறிவிப்பு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மயிலாதுறையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது பேசிய கமல், நண்பர் ரஜினியின் அறிக்கை பற்றி அனைவரும் கேட்பார்கள். அதற்கு முன்னால் நான் சொல்கிறேன். பிரசாரம் பயணம் முடிந்த பிறகு சென்னை சென்றவுடன் அவரை மீண்டும் சந்திப்பேன்.
என்னைப் பொறுத்தவரையில் அவரது ரசிகர்களின் மனநிலைதான் எனக்கும். சற்று ஏமாற்றம் இருந்தாலும் அவருடைய ஆரோக்கியம் எனக்கே மிகவும் முக்கியமான விஷயம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும். அவரைப் பற்றிய பேச்சு இப்போது போதுமானது. அவரை சந்தித்துவிட்டு நான் செய்தி செல்கிறேன் உங்களுக்கு” என்றார்.