தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாகக் கோவையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கோவையில் கொரோனா பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அரசு அலுவலர்கள், தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் ராமச்சந்திரன் (வனத்துறை), சக்கரபாணி (உணவுத்துறை) ஆகியோர் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசினர்.
இந்தக் கூட்டத்திற்கு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தாமோதரன், செல்வராஜ், மற்றும் அம்மன் அர்ச்சுணன், அருண்குமார், ஜெயராம், அமுல்கந்தசாமி, கந்தசாமி ஆகியோர் காலை நிகழ்ச்சி தொடங்குவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னரே வந்தனர். ஆனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரத் தாமதமானது.
12 மணிக்கு வந்த அமைச்சர்கள், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களைப் பார்த்து வணக்கம் வைத்தனர். அதன் பின், கூட்ட அரங்க மேடையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க., அமைச்சர்களுடன் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் போல பேதமின்றி உரையாடினர்.
'நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் கோவையில் தி.மு.க., வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரே வெற்றி பெற்றுள்ளனர். கோவையில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் சூழலில், கட்சிப் பாகுபாடு இன்றி தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர்களுடன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்கது. இது ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு முன்னோட்டம், இது தொடர வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.