தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய முடியாது என்றும், பரந்துபட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுக்கு ஒருபோதும் இடமில்லை என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் பரந்துபட்ட கூட்டமைப்பு உருவாக்கம் தொடர்பான பேச்சுக்களில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்து வரும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரிடம், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார். '"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்று அவர்கள் நீண்ட காலமாகக் கூறிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இப்போது மீண்டும் அதைச் சொல்லியிருக்கின்றார்கள். பல்வேறு விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் நிலையில்தான், பரந்துபட்ட கூட்டமைப்புக்கான கோரிக்கையை பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும் முன்வைத்தன. அதைத் தமிழரசுக் கட்சி நிராகரித்துள்ளது. ஒன்றில் தமிழரசுக் கட்சி திருந்த வேண்டும். இல்லையேல், புளொட்டும், ரெலோவும் தெளிவான – திடமான முடிவை எடுக்கவேண்டும். பரந்துபட்ட கூட்டமைப்பு அமைப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்" என்றார். |