புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2013

ரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ராஜ்யசபாவுக்கான தேர்தல், தமிழக சட்டப்பேரவையின் மனுக்கள் குழு அறையில் 27-ந்தேதி நடந்தது. 
ஒன்பது மணிக்கு தேர்தல் துவங்க, 10 நிமிடத்துக்கு முன்பே தங்கள் இருக்கையில் அமர்ந்த ஏஜெண்டுகள், அறையை ஒரு நோட்டம் விட்டனர். அ.தி.மு.க.தரப்பில் மொத்தம் 10 ஏஜெண்டுகள். அவர்களில் சிலர், "யாருக்கு ஓட்டுப் போட்டோம்னு ஆத்தரைஸ்
டு ஏஜெண்டிடம் பேலட் பேப்பரை காட்டிவிட்டுத்தான் ஓட்டுப் பெட்டியில் போட வேண்டும். அப்படி காட்டினால்தான் அந்த ஓட்டு செல்லுபடியாகும்னு ரூல்ஸ் இருக்கு. அப்படியிருக்க ஓட்டு பதிவை பதிவு செய்ய எதற்கு மறைவிடம் வைக்க வேண்டும்?' என கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.

முதலில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போடுவது போல நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் ஆளும் கட்சி தரப்பிலிருந்து யாரும் ஓட்டுப்போட செல்லவில்லை. மாறாக, ஜெயலலிதாவின் வருகைக்காக அமைச்சர்களும் அ.தி.மு.க.-கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களும் வரிசையாகவும் கூட்டமாகவும் காத்திருந்தனர். 10 மணிக்கு ஜெ.வருவதாக ஓ.பி.எஸ்.சுக்கு தகவல் தரப்பட்டது. இந்த தகவலை அறிந்ததும் எல்லோரும் அட்டென்ஷன் பொஷிஷனுக்கு வந்தனர். ஆனால், 11.45-க்கு தான் வந்தார் ஜெயலலிதா. அதுவரை ஒரு ஓட்டுக்கூட பதிவாகவில்லை. அதிகாரிகளும் ஏஜெண்டுகளும் தேமே என உட்கார்ந்திருந்தனர்.



ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் பேசிய நாம், ""யாரும் ஓட்டுப்போட போகவில்லையா?'' என்ற போது,’’""முதல் ஓட்டு அம்மாதான் போடணும். அதற்குப்பிறகுதான் நாங்கள்'' என்றனர். அவர்களிடம், ""தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வந்திருக் கிறார்களே அவர்கள் ஓட்டுப்போட அறிவுறுத்தப்பட்டிருக் கிறதா?'' என்று கேட்டபோது, ""ஆமாம் அதிருப்தி எம்.எல். ஏ.க்கள் 7 பேரில் மைக்கேல்ராயப்பன், சுந்தரராஜன், தமிழழகன் மூவரும் கம்யூனிஸ்ட் டி.ராஜாவுக்கு ஓட்டு போடவும், மற்ற 4 பேர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அ.தி.மு.க. வேட் பாளருக்கு ஓட்டு போடவும் என எங்க மேலிடம் அறிவுறுத்தி யுள்ளது. மேலும், ரெட்டை இலையில் நின்னு ஜெயித்த மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் டி.ராஜாவுக்கு ஓட்டளிப்பது மாதிரி பிரிக்கப்பட்டுள்ளது'' என்றனர். 

""அமைச்சர்கள் ஓ.பி.எஸ்., நத்தம்விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம், பழனியப்பன் ஆகிய 5 பேர் தலைமையில் ஒவ்வொரு டீம் அமைக்கப்பட்டு அதில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் எப்படி ஓட்டுப்போடணும் என்று பயிற்சி தரப்பட்டிருந்தது. இதில் ஓ.பி.எஸ். தலைமையிலான டீம் டாக்டர் மைத்ரேயனுக்கும், நத்தம் தலைமையிலான டீம் அர்ஜுனனுக்கும், முனுசாமி டீம் ரத்னவேலுக்கும், வைத்திலிங்கம் டீம் லஷ்மணனுக்கும், பழனியப்பன் டீம் டி.ராஜாவுக்கும் ஓட்டுப் போட வேண்டும் என தங்கள் எம்.எல்.ஏ.க்களை பிரித்திருந்தார் ஜெ. இதில் அவர் பெயர், ஓ.பி.எஸ்.டீமில் இருந்தது'' என்கின்றனர் ஆளும் கட்சியினர்.


ஜெயலலிதா வருவதற்கு காலதாமதம் ஆகிக் கொண்டேயிருந்த நிலையில், தனது டீமில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம், ""நேத்து கொடுத்த பயிற்சியெல்லாம் ஞாபகம் இருக்கில்லே. யாரும் சொதப்பிடாதீங்க. இன்- வேலிட் ஓட்டுப்போட்டுடாதீங்கப்பா'' என்று சீரியஸாக சொல்லிக்கொண்டிருந்தார் ஓ.பி.எஸ்.! 

இந்த சூழலில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து தி.மு.க.வுக்கான அறையில் உட்கார்ந்திருக்க, துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு சகிதம் கோட்டைக்கு வந்தார் மு.க.ஸ்டாலின். இவருடன் வேட்பாளரான கனிமொழி வருவார் என தி.மு.க.வினர் எதிர்பார்க்க, கனிமொழி வரவில்லை. ஜெயலலிதா ஓட்டுப்போட்டுவிட்டுப் போகும் வரை தங்களது கட்சி அறையில் காத்திருந்தார் ஸ்டாலின்.

11.45-க்கு கோட்டைக்கு வந்த ஜெயலலிதா, ஓட்டுப் போடும் அறைக்குள் நுழைந்தபோது, அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளே நுழைய அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டார் பிரவீன்குமார். அதேபோல, அரசு ஃபோட்டோகிராபர்களில் ஒருவரை தவிர மற்றவர்களை அனுமதிக்கவில்லை. முதல் ஓட்டை ஜெ. பதிவு செய்ய ஓட்டுப்பதிவு துவங்கியது. பேலட் பேப்பரில் தான் விரும் பும் வேட்பாளர் பெயருக்கு எதிரே இருந்த பாக்ஸில் 1 என்று பதிவு செய்து விட்டு மறக்காமல் அதை அ.தி.மு.க.வின் ஆத்தரைஸ்ட் ஏஜெண் டான செம்மலையிடம் காட்டிவிட்டு அதை ஓட்டுப்பெட்டியில் போட்டார். ஜெ.வை தொடர்ந்து சபாநாயகர் தனபால் ஓட்டுப்போட, பிறகு ஒவ்வொரு  டீமாக ஓட்டுகளை பதிவு செய்தது.

ஓட்டுப்போட்டுவிட்டு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரிடம் "ஏதேனும் சுவாரஸ்யம் இருக்கா?' என்ற போது, ""தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.வான சேந்த மங்கலம் சாந்தி, தனது ஓட்டைப் பதிவு செய்துவிட்டு அதனை தே.மு.தி.க.வின் ஆதரைஸ்டு ஏஜெண்டான வெங்கடேசனிடம் காட்ட, "யாருக்கு ஓட்டுப்போட் டீங்கன்னு சரியா தெரியலை. விரலை எடுங்க' என்று வெங்க டேசன் சொன்னார். விரலை நகர்த்தினார் சாந்தி. ஆனாலும் சரியாக தெரியவில்லை. உடனே வெங்கடேசன், "சார் இவங்க சரியா காட்ட மறுக்கிறாங்க'ன்னு அதிகாரிகளிடம் சொல்லவும்,  யாருக்கு ஓட்டுப்போட்டேன் என்பதை சரியா காட்டிவிட்டு வந்தார் சாந்தி. வெங்கடேசன் தலையில் அடித்துக்கொண்டார்'' என்றார் அவர். சாந்தியிடம் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என நாம் கேட்டபோது, ""மெஜாரிட்டி எம்.பி.க்கள் எந்த கட்சியில் ஜெயிப்பார்களோ அந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டேன்'' என்றார்.

தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் வந்த விஜய காந்த், அவரது வேட்பாளர் வெற்றிபெற சாத்தியமில்லை என்றாலும் சிரித்த முகமாகவே இருந்தார். பத்திரிகை யாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் பதிலேதும் சொல் லாமல் ஓட்டுப்போடும் அறைக்குள் நுழைந்தார். இந்த சூழலில், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் ம.ம.க. ஜவாஹிருல்லாவும் அடுத்தடுத்து வர, அவர்களை தங்கம்தென்னரசுவும் மைதீன்கானும் அழைத்து சென்று உள்ளே அமர வைத்தனர். அடுத்த 10 நிமிடத்தில் கலைஞர் வர, தி.மு.க.வினர் வரவேற்று அழைத்துச் சென்றார்கள். கலைஞரின் காரை பின் தொடர்ந்து  தனியாக வந்திறங்கினார் கனிமொழி. விஜயகாந்த் உள்ளே இருந்ததால் கலைஞரும் விஜயகாந்தும் சந்தித்துக் கொண்டனர் என்று வெளியே பரபரப்பு எதிரொலித்தது. ஆனால், ""தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் வெவ்வேறு பக்கத்தில் அமர்ந்திருந்ததால் இந்த சந்திப்பு நடக்க வில்லை'' என்றனர் தே.மு.தி.க.வினர்.

கலைஞரை தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், விஜயகாந்த்தை தொடர்ந்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுக்களை பதிவு செய்ய, பா.ம.க. மூன்று ஓட்டுகள் புறக்கணிப்பால் 231 வாக்குகள் பதிவானபோது மதியம் 2.30 மணி. அதன் பிறகு ஓட்டுப்போடும் அறையில் ஓட்டுப்போடுவதற்கான எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை. போட்டியிட்ட 4 கட்சிகளும் 2-வது விருப்புரிமை வாக்குகளை யாருக்கும் பதிவு செய்ய வேண்டாம் என தங்களது எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியிருந்ததால் 2-வது விருப்புரிமைக்கே வேலையில்லாமல் போய்விட்டது.


5 மணிக்கு ஓட்டுப்பெட்டியை திறந்து வாக்குச் சீட்டுகளை அனைத்து கட்சியினரின் முன்னிலையில் கொட்டினார் தேர்தல் துணை அதிகாரி ஜமாலுதீன். ஒவ்வொரு வாக்குச்சீட்டாக பிரித்து அதனை கட்சியினரிடம் காட்டிவிட்டு அந்தந்த வேட்பாளருக்குரிய பெட்டியில்  போட்டார். ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன் முடிவில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் மைத்ரேயன் 36, அர்ஜுனன் 36, ரத்னவேலு 36, லக்ஷ்மணன் 35, சி.பி.ஐ., டி.ராஜா 34, தி.மு.க. கனிமொழி 31, தே.மு.தி.க. இளங்கோவன் 22 என வாக்குகளைப் பெற்றனர். இளங்கோவனைத் தவிர  6 பேரும் வெற்றிபெற்றதாக அறிவித்தனர் அதிகாரிகள். இதில், செல்லாத ஓட்டு ஒண்ணு. அந்த ஒரு ஓட்டு கனிமொழிக்கு விழவேண்டியது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்தனர் தி.மு.க.வினர்.  இந்த பரபரப்பு களுக்கு மத்தியில், வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றுக் கொண்டு சி.ஐ.டி. காலனிக்கு வந்தார் கனிமொழி.  அங்கு கலைஞரிடம் சான்றிதழைக் காட்டி ஆசி பெற்ற கனிமொழிக்கு முத்தமிட்டு வாழ்த்தினார் கலைஞர். தி.மு.க. பிரபலங்கள் கனிமொழிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க, ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டத்துடன் மகிழ்ந்தனர் உ.பி.க்கள்.

விஜயகாந்த்தும் 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரித்த மகிழ்ச்சியில் குஷியாக இருந்தார்.

-இரா.இளையசெல்வன்
படங்கள்: ஸ்டாலின் & அசோக்

 செல்லாத ஓட்டு போட்ட எம்.எல்.ஏ. யாரு?

கனிமொழி வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியில் சி.ஐ.டி. காலனி திளைத்திருக்க, ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாக விழுந்ததில் கலைஞருக்கு வருத்தம். இதுபற்றி அவர் தி.மு.க.வினரிடம் விவாதித்தபோது பொன்முடியும், எ.வ.வேலுவும், ""இது செல்லாத ஓட்டுன்னு ஒரு பேலட் பேப்பரை தேர்தல் அதிகாரி ஜமாலுதீன் எங்களிடம் காட்டினார். அதில் 1-ன்னு ஒரு கோடு போடப்பட்டு அதன் கீழே சற்று இழுத்துவிடப்பட அது "க' மாதிரி பதிவாகியிருந்தது. அதை பார்க்கும்போது தற்செயலாக நடந்த தவறு மாதிரி இருந்தது. அதனால், இந்த ஓட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி னோம். ஆனால், ஏற்க மறுத்துவிட்டார் ஜமாலுதீன். சரி... நாமதான் ஜெயிக்கப் போகிறோமே எதுக்கு கான்ட்ராவெர்சி என நினைத்து அமைதியானோம். அப்போ தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமா ரிடம் இதுபற்றி ஜமாலுதீன் விவாதிக்க அவரோ, "உங்கள் முடிவு' என்று கூறிவிட்டார். ஆனால் ஜமாலுதீனோ அதை செல்லாத ஓட்டாகவே கணக்கில் எடுத்துக் கொண்டார்'' என விவரித்தனர்.

இருப்பினும் செல்லாத ஓட்டு விழுந்ததில் கலைஞரின் மனம் அமைதி கொள்ளவில்லை. இதற்கிடையே தவறுதலாக போடப்பட்ட செல்லாத ஓட்டை யார் போட்டது என்பதில் காங்கிரஸின் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸை நோக்கியே பலரின் கை நீண்டது. ஆனால், அவர் தரப்போ இதனை மறுக்கிறது.

ad

ad