இராமேஸ்வரம் கடலில் தத்தளித்த கிளிநொச்சி இளைஞன் மீட்பு: புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை
கிளிநொச்சி அம்மன்புரம் பகுதியை சேர்ந்த வசீகரன் என்ற இளைஞனே இவ்வாறு கடலில் தத்தளித்தவேளை காப்பாற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை இராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது கடலில் தத்தளித்து கொண்டு இருந்த குறித்த இளைஞனை மீட்டு, உடனடியாக சங்குமால் கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
அதன் பின்னர் வசீகரனை கடற்கரை பாதுகாப்பு குழும பொலிஸாரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.
பொலிஸார் வசீகரனை இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பொலிஸார் வசீகரனிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில்,
தான் சென்னை உத்தண்டி பகுதியில் வசித்து வருவதாகவும், இலங்கை செல்வதற்காக பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகு ஒன்றில் சென்றதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், அந்த படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது ரோந்து பணியில் அப்பகுதியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினரின் சோதனையில் இருந்து தப்பிக்க படகில் இருந்த மீனவர்கள் வசீகரனை கடலில் தள்ளிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வசீகரன் கூறிய தகவல்கள் உண்மையா அல்லது அவர் இலங்கையில் இருந்து வந்துள்ளாரா? என்பது குறித்து புலனாய்வு துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.