அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்ட அதிநவீன அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் வீலர் தீவில் இருந்து ஏவுகணை பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை எளிதில் ஏவும் சாதனத்தை கொண்டு ஏவுகணை பரிசோதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணை நிலத்தில் இருந்து 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை உள்ள இலக்கைச் சென்று தாக்கும் தன்மை கொண்டது. ஒரு டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் தாங்கி சென்று தாக்கும் தன்மையே இதன் சிறப்பு.
அக்னி 5 ஏவுகணை 50 டன் எடையும், 17 மீட்டர் நீளமும் உடையது. இந்த ஏவுகணை தரையிலிருந்து மற்றொரு தரைப்பகுதியைத் தாக்கும் திறன் கொண்டது. இதற்கு முன் இது போன்ற ஏவுகணையை சீனாவும் ஐரோப்பாவும் தான் சோதித்துள்ளன.
முன்னதாக 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை அக்னி 5 வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. மேலும் சில சோதனைகளுக்கு பிறகு அக்னி 5 ஏவுகணை முறைப்படி பயன்பாட்டுக்கு வரும்.
அக்னி 5 அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சோதனை நமது நாட்டின் ஆற்றலை மேலும் அதிகப்படுத்துவதற்கான பரிசு என மோடி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.