யாழ்.மாவட்டத்தில் இயங்கி வரும் விடுதிகள் முன்அறிவித்தல் இன்றி திடீர்சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் தலைமைப் பொலிஸ் அதிகாரிக்கும் இடையில்சந்திப்பொன்று நேற்று பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு விடுதிகளும் ஒரு காரணமாக உள்ளன.
18 வயதுக்கு குறைந்த ஆண்கள் மற்றும் பெண்களும் விடுதிகளுக்கு செல்கின்றனர். இதனால் சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கின்றது. இதற்கு உடனந்தையாக விடுதிகளும் செயற்படுகின்றன.
எனவே எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் செயற்பாடுகளுக்கு விடுதி உரிமையாளர்கள் துணைபோக கூடாது. விடுதிகளுக்கு வருபவர்களை நன்கு விசாரித்த பின்னர் உண்மையில் விடுதிகளில் தங்க வேண்டிய தேவை ஏற்பட்டால் மட்டுமே அவ்வாறு வருபவர்களை அனுமதிக்க வேண்டும்.
பணத்திற்காக செயற்பட கூடாது. இதுபோல போதைப்பொருள் வியாபாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க விடுதிகள் செயற்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறியத்தர வேண்டும்.
அவ்வாறு செயற்பட தவறின் பணம் , தகுதி என எதுவும் பாராது சட்டநடவடிக்கை எடுக்கப்படும். மேலும் , எதிர்வரும் காலங்களில் விடுதிகள் மீது இரவு பகல் எதுவும் பாராது திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 35 விடுதிகளில் 24 விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.