யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அதிகரித்த போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் கல்வி வலையத்திற்கு
உட்பட்ட அதிபர்களுக்கும் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யு.கே .வூட்லருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
உட்பட்ட அதிபர்களுக்கும் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யு.கே .வூட்லருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு செம்மணி வீதியில் உள்ள வலையக்கல்வி அலுவகத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணத்தில் தற்போது போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸார், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் உண்டு.
பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளனர் எனவே பாடசாலை நேரங்கள் தேவையற்ற விடயங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை எடுத்து அவர்களை சரியான வழியில் செல்ல அதிபர்களும் ஆசிரியர்களும் முன்வர வேண்டும்.
தற்போது அதிகரித்துள்ள துஷ்பிரயோகம் மற்றும் போதை பாவனைக்கு தொலைபேசிகள் மற்றும் இணைய வசதிகளே காரணம். எனவே இவை குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உண்டு.
அத்துடன் சிறிய வயதிலேயே பேஸ்புக்கினை மாணவர்கள் வைத்திருக்கின்றார்கள். அதில் உள்ள நண்பர்களுக்கு தங்களுடைய புகைப்படங்களை அனுப்புவதன் மூலம் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.
எனவே அவ்வாறான சந்தர்ப்பத்தில் மிரட்டல்கள் , கப்பம் பெறல், துஷ்பிரயோகம் என்பன இடம்பெறுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அத்துடன் ஒரு மாணவியோ அல்லது மாணவனோ பாடசாலைக்கு வருகை தராதுவிட்டால் எதற்கான அன்றையதினம் வரவில்லை என்ற காரணத்தை அதிபர் உடனடியாக தெரிந்து கொள்ளவேண்டும். இதற்கு பெற்றோர்களுடன் அதிபர்கள் ஆசிரியர்கள் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் புத்தகப்பையினை அடிக்கடி பார்க்க வேண்டும்.ஏனெனில் வீட்டில் இருந்து பாடசாலைக்கு என சென்றுவிட்டு வெளியில் சென்று மாற்று உடைகளை அணிந்து கொண்டு பாடசாலைக்கு செல்லாது வேறு இடங்களுக்கு செல்கின்றனர். மீண்டும் பாடசாலை முடியும் நேரத்திற்கு பாடசாலை சீருடையை அணிந்து வீட்டிற்கு செல்கின்றனர்.
எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளில் நம்பிக்கை கொண்டிருந்தாலும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அத்துடன் பாடசாலைக்கு அண்மையில் ஜஸ்கிறீம் விற்றல் மற்றும் பெட்டிக்கடைகளை அனுமதிக்க வேண்டாம். அவ்வாறு மீறுபவர்கள் தொடர்பில் எமக்கு அறிவியுங்கள் பொலிஸார் என்றும் நடவடிக்கை எடுப்பதற்கு காத்திருக்கின்றனர்.
மேலும் எமது சேவையினை மேற்கொள்ள அதிபர்களதும் ஆசிரியர்களதும் ஒத்துழைப்பு இன்றியமையாதது. எனவே எதிர்காலத்தில் மாணவர்களது பெற்றோர்களை சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்து தாருங்கள் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.